சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல் 23) நெருங்கி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வைக் கடுமையாகச் சாடி, தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பரபரப்பான திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்“ எனத் தொடங்கும் அந்த அறிக்கையில், ஆளுங்கட்சியின் தேர்தல் தில்லுமுல்லுகள், பரப்புரைக்கான தடைகள் மற்றும் அரசியல் விமர்சனங்களை அவர் மிகக் காட்டமாகப் பதிவு செய்துள்ளார். விஜய்யின் இந்த அறிக்கை தமிழக அரசியல் களத்தில் இன்று பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அவரது அறிக்கையின் முக்கியச் சாராம்சங்கள் இதோ:
“காபந்து அரசின் கபட நாடகம்!”
திமுக அரசை ‘திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்’ என விமர்சித்துள்ள விஜய், த.வெ.க-வின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆளுங்கட்சி திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளிப்பது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது என காபந்து அரசான திமுக, அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு நெருக்கடி தருகிறது.”
“நமது பிரசார நிகழ்ச்சிகள் குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பும் பரம்பரைத் தில்லுமுல்லுகளை திமுக தொடர்கிறது.”
“பவள விழா பாப்பா… நாங்க பழைய ஃபார்மட் இல்ல!”
திமுக-வை மறைமுகமாகவும் நேரடியாகவும் கிண்டல் செய்துள்ள அவர், த.வெ.க-வின் பிரசார வியூகம் மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்… நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாகப் பிரசாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.”
ஏப்ரல் 23-ல் அடிக்கும் ‘விசில் புயல்‘:
பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோரின் சமூக நீதி மண்ணில் பாசிச சக்திகள் மட்டுமல்ல, பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ திமுக-வும் மறுமுறை ஆட்சிக்கு வர முடியாது என விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
“தான் என்ற அகந்தையில் ஆடும் இவர்களின் ஆட்டமெல்லாம் ஏப்ரல் 21-ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் த.வெ.க–வின் ‘விசில் புயலில்‘ வீழ்வது உறுதி.”
“லிமிடெட் கம்பெனி திமுக–விற்கு பேக்–அப்“:
அறிக்கையின் முத்தாய்ப்பாக, “எல்லையின்றி (Without Limitation) அராஜகத்தையும் ஊழலையும் செய்து, பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் ‘லிமிடெட் கம்பெனி‘ தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்“ எனத் தனது தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் விஜய் அறைகூவல் விடுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் (ஏப்ரல் 21 மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது), விஜய்யின் இந்த அறிக்கை மிக முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பாஜக-வை ‘பாசிச சக்தி’ என்றும், திமுக-வை ‘பாசிச மனநிலை கொண்ட ஊழல் சக்தி மற்றும் லிமிடெட் கம்பெனி’ என்றும் ஒரே நேரத்தில் விமர்சிப்பதன் மூலம், இரு திராவிட/தேசியக் கட்சிகளுக்கும் மாற்றுத் தாங்கள்தான் என்பதை விஜய் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்க முயல்கிறார்.

