சிபிஎஸ்சி பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு நிதியுதவி, ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது.
முற்போக்கான சீர்திருத்தத்தை தவறாக சித்தரிப்பது குழப்பத்தை உருவாக்கும். ஒவ்வொரு இந்திய மொழியையும் வலுவூட்டும் தேசியப் பணியில் இணையுங்கள். இந்தி திணிப்பு வாதத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாண்புமிகு திரு தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, உங்கள் கருத்துக்கள் மிகவும் பொறுப்பற்றதும் அவசரத்தனமானதும் ஆகும்; மேலும், இந்தியாவின் பன்மை, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மரியாதையைப் பற்றிய ஆழமான அலட்சியத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாடு #ThreeLanguagePolicy-யை உறுதியாக நிராகரிக்கிறது. இது மொழிகளை எதிர்ப்பது குறித்து அல்ல; திணிப்பை எதிர்த்து அரசியலமைப்புச் உரிமைகளை பாதுகாப்பது குறித்ததாகும். பாராளுமன்றத்தில் தமிழர்கள் குறித்து நீங்கள் முன்பு தெரிவித்த அவமதிப்பான கருத்துகளும், பின்னர் தாமதமாக அளிக்கப்பட்ட மன்னிப்பும், ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை முறையின் தொடர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
திமுக அரசின் ஊழல்.. பாஜக வெளியிட்ட கருப்பு மற்றும் வெள்ளை அறிக்கை!
“இந்தி திணிப்பு இல்லை” என்ற உங்கள் கூற்று வெளிப்படையாகவே நேர்மையற்றது. ஒரு கொள்கை அமைப்பில், தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்கள், உண்மையான தேர்வு வாய்ப்பின்றி மூன்றாவது மொழியை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும்போது, மேலும் முக்கியமான கல்வி நிதி அதற்கான இணக்கத்துடன் கட்டுப்படுத்தப்படும்போது, அது இனி தேர்வின் விஷயமாக இருக்காது.
‘Samagra Shiksha’ திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி என்ற மிகப்பெரிய தொகையை சட்டவிரோதமாக நிறுத்தி வைப்பது துணிச்சலின் உச்சம் தான்; இதன் மூலம் #HindiImposition-ஐ ஏற்க மறுத்ததற்காக தமிழ்நாட்டை தண்டிக்க முயல்கிறீர்கள். இவை விருப்ப நிதிகள் அல்ல; தமிழ்நாடு மக்களுக்கு உரிய, அவர்கள் செலுத்திய வரிகளிலிருந்து கிடைத்த நிதி. அதை கட்டாயப்படுத்தும் கருவியாக பயன்படுத்த முடியாது.

இதையும் தெளிவாக கூற விரும்புகிறேன். எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாடு மொழித் திணிப்பை ஏற்காது—அது நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் மறைக்கப்பட்டாலும், நிதி அழுத்தத்துடன் இணைக்கப்பட்டாலும், அல்லது தேசிய நலன் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டாலும் கூட. இந்த கொள்கை மாணவர்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது; மாநிலங்களின் உரிமைகளை மீறுகிறது; மேலும் இந்தியாவின் மொழி பல்வகைப்பாட்டை ஒற்றை நிற “One India” வடிவமாக மாற்ற முயல்கிறது.
வாக்குவாதங்களின் சத்தத்தில், அடிப்படை கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்றாவது இந்திய மொழி எது? வட இந்தியாவில் உள்ள PM SHRI பள்ளிகளில் உண்மையாகவே தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென் இந்திய மொழிகளும், பெங்காலி, ஒடியா, மராத்தி போன்ற மொழிகளும் எத்தனை பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன?
கேந்திரிய வித்யாலய ‘Sangathan’-இன் கீழ் செயல்படும் பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தமிழ் மற்றும் பிற தென் இந்திய மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்? மேலும், சமஸ்கிருதத்துடன் ஒப்பிடும்போது தமிழ், கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற பாரம்பரிய மொழிகளை மேம்படுத்த NDA அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது என்பதை பதிவு செய்து காட்டுமாறு உங்களைச் சவால் செய்கிறேன்.
தமிழ்நாட்டில் பள்ளி அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன என்ற உங்கள் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. பல தசாப்தங்களாக நிலையான முதலீடுகள், அதிக சேர்க்கை விகிதம், சிறந்த கற்றல் முடிவுகள் மற்றும் முன்னோடியான நலத்திட்டங்களின் மூலம், இந்தியாவின் வலுவான பொது கல்வி அமைப்புகளில் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தி திணிப்புக்கு எதிரான எங்கள் நிலைப்பாடு பயத்திலிருந்து தோன்றியதல்ல. எங்கள் தாய் தமிழ் ஒருபோதும் பலவீனப்படாது. தமிழ் மற்றும் தமிழர்கள் எந்த வகையான திணிப்பையும், பண்பாட்டு தலையீடுகளையும் எதிர்த்து நிலைத்திருப்பார்கள். இது ஒரு கொள்கை, மரியாதை மற்றும் இந்தியாவின் உண்மையான பன்மையை பாதுகாப்பது குறித்த விஷயமாகும்.
மாநில ஒப்புமை மற்றும் வலுவான கல்வி முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எங்கள் இரண்டு மொழிக் கொள்கையை, மையம் இயக்கும், பன்மையை பாதிக்கும், மாணவர்களுக்கு சுமையாக இருக்கும் மற்றும் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு கட்டமைப்புக்காக தமிழ்நாடு ஒருபோதும் கைவிடாது. தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை உலக அளவில் ஒரு வெற்றிக் கதையாக திகழ்கிறது; அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் தமிழர்கள் சாதனை படைத்து வருகின்றனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும், உட்சேர்க்கையும் இந்த மாதிரியில் ஆழமாக வேரூன்றியுள்ளன. எங்கள் அனைத்து வாதங்களையும் தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்க முடியும்; உங்கள் வாதங்கள் வெறும் சொற்பொழிவாகவே உள்ளன.
தமிழ்நாட்டின் பள்ளிகள் நவீன கல்வியில் பின்தங்கியுள்ளன என்று கூறுவது தவறானதும் அவமதிப்பானதுமாகும். சேர்க்கை, கற்றல் முடிவுகள் மற்றும் புதுமைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநில அரசு அடிப்படை வசதிகளில் முக்கிய முன்னேற்றங்களை செய்ததுடன், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயன் அளிக்கும் முதலமைச்சரின் இலவச காலை உணவுத் திட்டம் போன்ற முன்னோடியான முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. #DMKManifesto2026-இல், இந்த காலை உணவுத் திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, மேலும் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பொது கல்வி எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்; அதை செலவாக அல்ல, நீண்டகால சமூக நன்மைகளை உருவாக்கும் முதலீடாக பார்க்கிறோம்.
இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை, தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை நாடும் போது, தமிழ்நாட்டு மண்ணில் நின்று தெரிவிக்க உங்களை நான் சவால் செய்கிறேன்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் திரு. பழனிசாமி மற்றும் அவரது NDA கூட்டணியினரிடம் அவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவிக்குமாறு அழைக்கிறேன். பாஜக வலியுறுத்தி கொண்டு வரும் இந்த மூன்று மொழிக் கொள்கையை அவர்கள் ஆதரிக்கிறார்களா?
திரு. பழனிசாமி அவர்கள், தமிழ்நாடு மக்களுடன் நிற்கிறாரா அல்லது இந்தி திணிப்பை கொள்கை என்ற பெயரில் திணிக்க முயலும் தில்லி தலைமையுடன் நிற்கிறாரா என்பதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

