அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் நுழைந்த நாய் ஒன்று வாலிபரின் உடலை சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டம் நாகசாலா பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பீமேஸ்வர் (32), கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்கிறேன் என குடும்பத்தினரிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பீமேஸ்வர் உயிரிழந்த நிலையில் மிதந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜட் சர்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு புகுந்த நாய் ஒன்று உடலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்ட ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, உடலை பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் வைத்து இரவு முழுவதும் பாதுகாத்து, பின்னர் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைப் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

