விழுப்புரத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை நயன்தாராவை வைத்து பேசியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு ஆளும்கட்சி உட்பட கூட்டணி கட்சியினரே சி.வி சண்முகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், முன்னாள் எம்பியுமான ஓ.பி ரவீந்திரநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிககையில், எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, தனது திறமையாலும் கடின உழைப்பால் இன்று ‘சிறந்த நடிகை’ என்ற பெயரை மட்டுமல்லாமல், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் திருமதி.நயன்தாரா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கும் அதிமுக எம்.பி திரு. சி.வி. சண்முகம் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசுவது அரசியல் அல்ல, அது நாகரிகமின்மையின் வெளிப்பாடு. ஒரு பெண்ணின் கண்ணியத்தை காயப்படுத்தும் பேச்சு, பேசுபவரின் குணநலனையே காட்டுகிறது. அரசியல் மேடை என்பது அவமதிப்பு செய்யும் இடம் அல்ல. பெண்களை குறிவைத்து பேசுவது, பலவீனமான அரசியலின் அடையாளம். அவர் சார்ந்த கட்சித் தலைமை அஇஅதிமக அவரை கண்டிக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஆகையால், திரு. சி.வி. சண்முகம் அவர்கள் தனது கருத்துக்கு உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும். இனி வருங்காலங்களில் இது போன்று நடைபெறா வண்ணம் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

