கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் தனியார் பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் என்ற வாலிபருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதை அடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். பிறகு செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு தினமும் பேசி வந்து உள்ளனர். அப்பொழுது தருண் அந்த இளம் பெண்ணிடம் நாம் நேரில் சந்தித்து பேசலாமா ? என்று கேட்டு உள்ளார். அதற்கு அந்த இளம் பெண் சம்மதித்ததால் கடந்த 2 ஆம் தேதி இரவு இரண்டு பேரும் நேரில் சந்தித்தனர்.
பின்னர் தருண் அந்த இளம் பெண்ணை தனது காரில் நவக்கரை பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே அழைத்துச் சென்றார். அங்கு இரண்டு பேரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது அங்கு தருணின் நண்பரான 22 வயது வாலிபர் வந்து உள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து பணம், நகையை கேட்டு இளம் பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வேறு வழி இன்றி மூன்று பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
அதன் பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டதோடு கூகுள் பே மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் இளம்பெண்ணை தருண் தனது காரில் ஏற்று இரவு 11 மணி அளவில் கோவையில் உள்ள தனியார் விடுதியின் முன்பு இறக்கி விட்டார். அப்போது அந்த இளம் பெண் தருனிடம் 11 மணிக்கு மேல் விடுவிக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுங்கள் என்று கெஞ்சி உள்ளார்.
இதனால் நட்சத்திர ஓட்டலில் அறை முன்பதிவு செய்து அங்கு இளம் பெண்ணை இறக்கிவிட்டு தருண் சென்றார். ஓட்டலின் அறைக்குள் சென்ற இளம் பெண் நடந்த சம்பவம் குறித்து தனது தங்கையிடம் கூறி அழுதார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மறுநாள் காலையில் கோவைக்கு விரைந்து வந்தார். பின்னர் தனது அக்காளை அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் காதலன் தருணுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி நகை பணத்தை பறித்தது காவல் துணை கண்காணிப்பாளர் மகன் என்பதும், அவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்து உள்ளது. ஆனால் அவரது முழு விவரம் இன்னும் தெரியவில்லை, எனவே தலைமறைவான அந்த இரண்டு பேரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

