அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்பும், அதிமுகவை மீட்க பல வியூகம் அமைத்து, கோர்ட் படியேறிய அவருக்கு தோல்வியே கிடைத்தன. இறுதி வாய்ப்பாக என்டிஏ கூட்டணியில் இணைய பலமுறை முயற்சித்தும், எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டதால் அவர் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கழகத்தின் தம்மை இணைத்துக் கொண்ட பிறகு சென்னையில் உள்ள எனது முகாம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியது உவகை அளிக்கிறது.
திரு. ஓபிஎஸ் அவர்கள் நெடுங்காலமாக உத்தமபாளையத்தில் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், அவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நான் அரசியலுக்கு நுழையாமல் வங்கியாளராக இருந்தேன்.
அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். பின்னர் நான் ஆளும் கட்சி அமைச்சராகவும் அவர் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளோம்.
இவ்வாறு பல ஆண்டுகளில் சூழ்நிலைகள் பலவகையில் மாறியிருந்தாலும், அவர் எப்போதும் என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மாறாத அன்பும் மதிப்பும் கொண்டு நட்பு பாராட்டிவந்துள்ளார்.

அந்த அடிப்படையில், அவர் தம்மை நமது கழகத்தில் இணைத்துக் கொண்டதும், அதன் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமைந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இச்சந்திப்பில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. தங்க தமிழ்செல்வன், MP., திரு. ஓ. பி. ரவீந்திரநாத், Ex. MP., திரு. கோபாலகிருஷ்ணன், Ex. MP., உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

