மும்பை: இஸ்ரேல் – லெபனான் இடையேயான தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பால் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட நேர்மறையான மனநிலை, இன்று இந்தியப் பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் லேசான தயக்கத்துடன் தொடங்கிய சந்தை, போர் பதற்றம் தணிந்த செய்திகளால் நாள் முழுவதும் விறுவிறுப்படைந்து லாபத்தில் முடிவடைந்தது.
சென்செக்ஸ் & நிஃப்டி நிலவரம் :
சென்செக்ஸ் : மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 504.86 புள்ளிகள் (+0.65%) உயர்ந்து, 78,493.54 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது.
நிஃப்டி : தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 156.80 புள்ளிகள் (+0.65%) உயர்ந்து, 24,353.55 என்ற புள்ளிகளில் முடிவடைந்தது.
துறைவாரியான செயல்பாடு :
இன்றைய வர்த்தகத்தில் அனைத்துத் துறை குறியீடுகளும் லாபத்திலேயே முடிவடைந்தன. குறிப்பாக FMCG, உலோகம் ,எரிசக்தி , ஆயில் & கேஸ் மற்றும் மின்சாரத் துறைப் பங்குகள் அபார வளர்ச்சியைக் கண்டன.
பரந்த சந்தை : முக்கிய குறியீடுகளைத் தாண்டி, பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.5% மற்றும் ஸ்மால்கேப் குறியீடு 0.9% உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தன.
லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த பங்குகள்:
டாப் கெயினர்ஸ் : நிஃப்டி பட்டியலில் இந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே , JSW ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் மற்றும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனப் பங்குகள் அதிக லாபத்தை ஈட்டின.
டாப் லூசர்ஸ் : விப்ரோ , HDFC லைஃப், சன் பார்மா, L&T, மற்றும் மகிந்திரா & மகிந்திரா (M&M) பங்குகள் சரிவைச் சந்தித்தன.
முக்கியச் சந்தை நகர்வுகள்:
- நகைத் துறை பங்குகள் சரிவு: தங்கம் மற்றும் நகைகள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, காலையில் ஏற்றத்தில் இருந்த டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் மதியத்திற்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்தன.
- ரூபாய் மதிப்பு : சர்வதேச சந்தையில் நிலைத்தன்மை திரும்பியதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து 92.85 ஆக நிலைபெற்றது.

